மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து திமுக எம்.பி. கனிமொழி பேட்டி...
தொகுதி மறுவரையறை மசோதாவிலேயே நிறைய குழப்பங்கள் இருப்பதாகவும் வாக்கெடுப்புக்கு முன்னதாக மசோதாவை திரும்பப் பெறுவார்கள் என்று நம்புவதாகவும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நேற்று(ஏப். 16) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும் திமுக எம்.பி.யுமான கனிமொழி பேசுகையில், "தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவசரமாக இந்த மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஏன்? மாநில அரசுகளுடன் இதுகுறித்து ஆலோசனை நடைபெற்றதா? இவ்வளவு நாள்களுக்கு பிறகு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அவசரம் ஏன்?" என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
Advertisement
அதேபோல திமுகவின் கருப்புப் போராட்டத்தை கிண்டலாக விமர்சித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடிக்கும், கனிமொழி பதிலளிக்கும் வகையில் பேசினார்.
இதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"இந்த மசோதாவிலேயே நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. அதில் எவ்விதத் தெளிவும் இல்லை என்றே நான் கருதுகிறேன். அவையில் அளிக்கப்படும் வெறும் வாய்மொழி உறுதிமொழிகள் எந்தவொரு மாநிலத்திற்கும் போதுமானவை அல்ல.
இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் காரணமாக குறிப்பாக தென் இந்திய மாநிலங்கள் நிச்சயமாகப் பாதிக்கப்படும். மேலும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இரண்டும் வெவ்வேறானது. ஒன்றோடொன்று தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை.
தற்போதுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கொண்டே நாம் இன்றும் மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியும். அவர்களைத் தடுப்பது எதுவென்று எனக்குப் புரியவில்லை.
இந்த மசோதாக்களுக்கு எதிராகவே நாங்கள் வாக்களிப்போம். அதற்கு முன்னதாகவே அவர்கள் இந்த மசோதாக்களைத் திரும்பப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்றார்.