தமிழ்நாட்டுக்கும் அதன் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கும் இடையே தேர்தல்: கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் என்று திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியில் திமுக தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசுகையில், "இந்தத் தேர்தல், வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் அதன் நலன்களுக்கு எதிரான சக்திகளுக்கும் இடையேயான தேர்தலாகும்.
இது மாநிலத்தின் கண்ணியத்தை காக்கவும், தமிழ்நாடு தலைகுனியாமல் இருப்பதை உறுதிசெய்யவும், தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நடைபெறும் தேர்தலாகும்.
Advertisement
எடப்பாடி பழனிசாமி, தேர்தல்களின்போது மட்டுமே மக்களைச் சந்திப்பார். ஆனால், மீதமுள்ள ஐந்தாண்டு பதவிக்காலத்தில் வருவதில்லை.
தமிழக மக்களுடன் தொடர்பின்றி, எடப்பாடியிலிருந்து சென்னைக்கும், பின்னர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தில்லிக்கும் சென்றுவிட்டுத் திரும்புவதே அவரின் அன்றாட வழக்கமாக உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து எடப்பாடி பழனிசாமி பின்வாங்கிவிட்டார். இந்தத் தேர்தலில் மக்கள் அவருக்கு ஒரு பாடம் புகட்டுவர்.
தமிழகத்துக்குக் கல்விக்காகச் சேர வேண்டிய ரூ. 3,600 கோடியை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. அதே வேளையில், பிகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசங்களுக்கு மட்டும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தி மொழியின் வளர்ச்சியை, நிதி மேம்பாட்டுடன் இணைத்து நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. மேலும், நீர் தொடர்பான திட்டங்களுக்கான நிதியும் போதுமானதாக இல்லை.
தமிழ் கற்பிக்கப் பலரும் தயாராக இருக்கும்நிலையில், மொழியின் வளர்ச்சிக்கு பங்களிக்கவோ தமிழ் மாணவர்களுக்கு ஆதரவளிக்கவோ மத்திய அரசு தவறி விட்டது.
அதுமட்டுமின்றி, திட்டங்களின் பெயர்கள் பெரும்பாலும் இந்தியிலேயே பெயரிடப்படுகின்றன. மத்திய அரசின் பல திட்டங்களுக்கு இந்தியில் பெயரிடப்படுவதால், இந்தி தெரியாதவர்களுக்கு அவை எளிதில் கிடைப்பதில்லை. உதாரணமாக, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற பெயர்கள் மக்களுக்குப் பெரும்பாலும் புரிவதில்லை.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத் திட்டத்தை முதலில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிதான் அறிமுகப்படுத்தினார். தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், மின்சார மீட்டர்களை பொருத்தாமலேயே விவசாயிகளுக்கு புதுய மின்சார மோட்டார்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள் தற்போது நிதியுதவியாக ரூ. 1,000 பெற்றுவரும் நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரூ. 1,500-ஆக உயர்த்தப்படும்.
கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டிருந்த மடிக்கணினித் திட்டம், தற்போதைய அரசால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, முப்பத்து ஐந்து லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.