வீரபாண்டி ஒன்றியப் பகுதியில் உள்ள 8 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.3.28 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் மனோன்மணி வழங்கினார்.
வீரபாண்டி வட்டாரத்திலுள்ள ஆட்டையாம்பட்டி அரசு எம்.என்.எஸ். மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, இளம்பிள்ளை பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளி, வேம்படிதாளம்,
வீரபாண்டி, முருங்கப்பட்டி மற்றும் வீரபாண்டி மாதிரிப் பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, ஆட்டையாம்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி வரவேற்றார். அட்மா குழுத் தலைவர் வருதராஜ் முன்னிலை வகித்தனர்.
வீரபாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோன்மணி தலைமை வகித்து, வீரபாண்டி வட்டாரத்திலுள்ள 8 பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ.3.28 கோடி மதிப்பிலான 2,670 விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் படிப்பிற்கு தேவையான அனைத்து பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல கருவுற்ற தாய்மார்களுக்கு அனைத்து பொருள்களும் வழங்கப்படுகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் 8 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர்கள், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைவேல் நன்றி கூறினார்.