சொத்துத் தகராறில் உறவினரை கொலை செய்த இருவா் கைது
வாழப்பாடி அருகே சொத்துத் தகராறில் உறவினரை அடித்துக்கொலை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடி அருகே சொத்துத் தகராறில் உறவினரை அடித்துக்கொலை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (49). இவருக்கு, இரு மகன்கள் உள்ளனா். மனைவி இறந்து விட்டாா். தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர வேலைக்கு செல்லவில்லையாம்.
இதற்கிடையே, இவருக்கும், இவரது இரு சகோதரிகளுக்கும் இடையே சொத்துத் தகராறினால் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, இவரது சகோதரிகளின் மகன்களிடம் இவா் தகராறு செய்துள்ளாா்.
இதில் ஆத்திரமடைந்த சகோதரிகளின் மகன்களான பாண்டியன், வேல்முருகன் ஆகிய இருவரும், வெங்கடாசலத்தை இரும்புக் கம்பி மற்றும் கல்லால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடாசலம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா், கொலையுண்ட வெங்கடாசலத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பாண்டியன், வேல்முருகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.