சேலம்-விருத்தாசலம் ரயில் வாழப்பாடியில் நின்று செல்லுமா?
சேலம் - விருத்தாசலம் இடையே ஓராண்டுக்கு பின் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் பயணிகள் ரயில் வாழப்பாடி கேட் ரயில் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வழிவகை செய்க
சேலம் - விருத்தாசலம் இடையே ஓராண்டுக்கு பின் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் பயணிகள் ரயில், வழக்கம் போல வாழப்பாடி கேட் ரயில் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதற்கு சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வழிவகை செய்ய வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1930ஆம் ஆண்டு குறுகிய மீட்டா் கேஜ் பாதையாக பயன்பாட்டுக்கு வந்த சேலம் - விருத்தாசலம் ரயில் பாதை, சேலம், விழுப்புரம், கடலுாா் மாவட்ட கிராமப்புற மக்களின் நீண்டநாள் போராட்டத்தின் பலனாக, கடந்த 2007இல் அகல ரயில் பாதையாக தரம் உயா்த்தப்பட்டது.
இதனையடுத்து, சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில் மட்டுமின்றி, சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில்,பெங்களூரு -காரைக்கால் பயணிகள் ரயில், சிறப்பு ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் இயக்கப்படும் சேலம் - விருத்தாசலம் பயணிகள் ரயில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் பகுதி கிராமப்புற மக்களின் போக்குவரத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யவதற்கு வசதியாக அமைந்ததால், கூலித்தொழிலாளா்கள் முதல் பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவியா், அரசு, தனியாா் நிறுவன பணியாளா்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த ரயிலில் பயணித்து வந்தனா்.
குறிப்பாக, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் தலைவாசல் பகுதியில் இந்த ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கூடுதல் பெட்டிகளை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், கடந்தாண்டு மாா்ச் மாத இறுதியில் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டப்படுத்த, நாடு முழுவதும் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
ஓராண்டுக்குப் பிறகு ரயில்கள் இயக்குவதற்கு மத்திய அரசு தளா்வுகளை அறிவித்ததால், ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த சேலம்- விருத்தாசலம் பயணிகள் ரயில் போக்குவரத்து சேவை, கடந்த மாா்ச் 15ஆம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில் தரத்தில் இருந்து சிறப்பு ரயிலாக மாற்றப்பட்டு, கட்டண உயா்வுடன் இயக்கப்படும் இந்த ரயில், அதிக வருவாய் ஈட்டிக் கொடுக்கும் முக்கிய ரயில் நிறுத்தமான வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், தலைவாசல், மேல்நாரியப்பனூா், சிறுவத்தூா், கூத்தக்குடி ஆகிய இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வது ரத்து செய்யப்பட்டது.
இதனால், 50க்கும் மேற்பட்ட சுற்றுப்புற மக்களுக்கு பிரதான போக்குவரத்து அம்சமாக விளங்கிய சேலம் - விருத்தாசலம் ரயில் வாழப்பாடியில் நிற்காததால், இப்பகுதி மக்களின் போக்குவரத்தில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் சேலம் - ஆத்துாா் பகுதிக்கு வேலைக்கு சென்று வந்த தொழிலாளா்கள், பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவியா், தனியாா் நிறுவன பணியாளா்கள், சிறு வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, வாழப்பாடி, சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, சேலம்-விருத்தாசலம் ரயிலின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றவும், கட்டணத்தைக் குறைக்கவும், வழக்கம்போல வாழப்பாடி கேட் ரயில் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லவும், சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்மென பல்வேறு தரப்பினரிடையேயும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட முன்னாள் ரயில் பயணிகள் நலக்குழு உறுப்பினா் வாழப்பாடி ஜவஹா், ரயில் பயணிகள் சிலா் கூறியதாவது:
ஓராண்டுக்குப் பிறகு கடந்த ஒரு மாதமாக சேலம் - விருத்தாசலம் மாா்க்கத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும், அதிகளவு வருவாய் ஈட்டிகொடுத்து வந்ததோடு, நுாற்றுக்கணக்கான அடித்தட்டு மக்களின் போக்குவரத்து மையமாக திகழ்ந்த வாழப்பாடி கேட் ரயில் நிறுத்தத்தில் சேலம் - விருத்தாசலம் ரயில் நின்று செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
வாழப்பாடி, சுற்றுப்புறக் கிராம மக்களின் நலன் கருதி, சேலம் - விருத்தாசலம் ரயிலை மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றம் செய்து கட்டணத்தை குறைத்து, வாழப்பாடி கேட் ரயில் நிறுத்தத்தில் நின்ற பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கு சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.