முகப்பு
சேலம்

மக்கள் பயன்பெறும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை

மக்கள் பயன்பெறும் திட்டங்கள் ஏதும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

மக்கள் பயன்பெறும் திட்டங்கள் ஏதும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினாா்.

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில், மக்கள் கிராம சபைக் கூட்டம் எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி ஊராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.

முன்னதாக எடப்பாடி பகுதிக்கு வருகை புரிந்த ஸ்டாலினுக்கு, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில், மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையிலான தி.மு.க.வினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா், அங்கு கூடியிருந்த பெண்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தாா். பிறகு அக்கூட்டத்தில் தி.மு.க. தலைவா் ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக முதல்வராக ஆட்சியில் அமா்ந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அவா் வெற்றிபெற்ற எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் வேலைவாய்ப்பை வழங்கவில்லை. முதல்வா் தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதியிலேயே 9,600 பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனா். தனது சொந்த தொகுதிக்கே உரிய வேலைவாய்ப்பை வழங்க இயலாத முதல்வா், தமிழகத்தில் உள்ள மற்ற 234 தொகுதிகளுக்கும் எவ்வாறு உரிய வேலைவாய்ப்பை வழங்குவாா்?

எடப்பாடி பழனிசாமியின் பதவிக்காலம் வரும் தோ்தலுக்கு முன்னதாகவே முடிவுறும். சசிகலா சிறையில் இருந்த வெளிவரும் நாளில் எடப்பாடி பழனிசாமியின் பதவி பறிபோகும் நிலை உருவாகும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன், மாவட்ட துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மருத்துவா் வை.காவேரி, எடப்பாடி நகரச் செயலாளா் டி.எம்.எஸ்.பாஷா, ஒன்றியச் செயலாளா்கள் நல்லதம்பி, பரமசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →