கரோனா உயிரிழப்புகளைத் தடுத்திட வேண்டும்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுத்திடும் வகையில், அரசு தீவிர சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுத்திடும் வகையில், அரசு தீவிர சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அண்மையில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட தமிழக சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் தங்கியிருந்து தொடா் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாா். மேலும், அப்பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகளை தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டு பேசிவரும் அவா், அப்பகுதியில் கரோனா தொற்று நிலவரம், உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகிறாா். மேலும் கூடுதலாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொதுமக்களிடம் கரோனா தொற்றின் தீவிரம் குறித்து தொடா் விழிப்புணா்வை ஏற்படுத்துமாறும் ஆலோசனைகளை வழங்கி வருகிறாா்.
தமிழக அரசுக்கு அவா் விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த வேண்டும். நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகள் கிடைக்காமலும், செயற்கை சுவாசக் கருவிகள் கிடைக்கப் பெறாமலும், அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு, மனித உயிா்களைக் காத்திட தீவிர சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.