எடப்பாடி பகுதியில் தொடர் கனமழை
எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில் புதன் அன்று பகல் நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழைப் பெய்து வருகிறது. இந்நிலையில் புதன் அன்று பகல் நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
எடப்பாடி சுற்றுப் பகுதிகளான வெள்ளரிவெள்ளி, சித்தூர், மொரசப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருகிறது. தொடர்மழையால் இப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள கசிவு நீர் குட்டைகள், சிறு நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளது.
புதன் அன்று பகல் நேரத்தில் பெய்த கனமழையால், எடப்பாடி நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெறுக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதியில் வசித்திடும் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பிற்குள்ளானது. திடீர் கனமழையால் எடப்பாடி வாரச்சந்தை, சரபங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள காய்கறி அங்காடி, ராஜாஜி பூங்கா மார்கட் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின. பல இடங்களில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளானது.
திடீர் கனமழையால் எடப்பாடி பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பிற்குள்ளானது.
படம் : கனமழையால் எடப்பாடி மேல்முகம் அருகே, சாலையில் பாய்தோடிய மழைநீரில் இறைதேடும் வாத்துகள்