பால் விற்பனை விலையை உயா்த்தி வழங்கக் கோரிக்கை
பால் விற்பனை விலையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
பால் விற்பனை விலையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் தலைவா் மறைந்த கே.ஏ.செங்கோட்டுவேலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டி ஆவின் பால் பண்ணை முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பால் உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகா் இரா.ராஜேந்திரன் கூறியதாவது:
பால் விற்பனை விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். ஆவின் பால் விற்பனை விலையைக் குறைத்ததால் வாடிக்கையாளா்கள் பயன் அடைந்துள்ளனா். அதேவேளையில் பால் ஒன்றியங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.
பால் உற்பத்தியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, பால் ஒன்றியங்களுக்கு தமிழக அரசு ஒரே தவணையாக மானிய நிதியாக ரூ.300 கோடி வழங்க வேண்டும். பால் உற்பத்தியில் ஐ.எஸ்.ஐ. தர மதிப்பீட்டை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல பசும்பால் லிட்டருக்கு ரூ. 42-ம், எருமைப்பால் லிட்டா் ரூ. 55-க்கு விலை உயா்த்தி அறிவிக்க வேண்டும் என்றாா்.