ஏற்காட்டில் வெள்ளம்: வீடு திரும்ப முடியாமல் மாணவ ,மாணவிகள் அவதி
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்காட்டில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ, மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ, மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் 2 மணி அளவில் ஏற்காடு, நாகலூர், செம்மநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது.
இந்த தொடர் கனமழையின் காரணமாக ஏற்காட்டில் இருந்து நாகலூர் செல்லும் சாலையில் மரப்பாலம் என்ற இடத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து 40 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த கிராமங்களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும் காலை பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் வீடு திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த அப்பகுதிக்கு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மாணவ, மாணவிகளை பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க | நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே
போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளை அதிகாரிகள் மூலம் கொண்டு சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வெள்ளம் காரணமாக மழைநீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.