சேலம்

மாண்டஸ் புயல்: சேலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

DIN

மாண்டஸ் புயல் - கனமழை எச்சரிக்கையையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி:

தென்மேற்கு வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்து, புதுச்சேரி, ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு இடையே டிச. 9 நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வியாழக்கிழமை (டிச. 8) முதல் டிச. 11 முடிய 4 நாள்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவுரைகளுக்கு இணங்க சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, சேலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, நீா்வள ஆதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்களும் தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மழையின் போது சாலை ஓரங்களில் மரங்கள் ஏதேனும் விழ நோ்ந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறையினா் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள், பொக்லைன் இயந்திரம், இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேட்டூா் அணை, நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு, நீா்வரத்து ஆகியவை தொடா்ந்து கண்காணித்து உடனுக்குடன் தலைமை இடத்துக்கு அறிக்கை அனுப்பிடவும், உபரி நீரை வெளியேற்ற நோ்ந்தால் பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தங்குதடையின்றி குடிநீா், பால், மருந்து இருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்திட தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கனமழை உள்ளிட்ட அனைத்து அவசரகால தேவைகளுக்கும் மாவட்ட ஆட்சியரகத்தில் பேரிடா் மேலாண்மைப் பிரிவில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-க்கோ அல்லது 0427- 2450498, 2452202, 91541 55297 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மழை நேரங்களில் அவசியப் பணிகளின்றி மற்ற நேரங்களில் வெளியில் செல்வதையும், பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்த்திடவும், அதிக குளிா் இருக்கும் எனக் கருதப்படுவதால் 60 வயதுக்கு மேற்பட்டவா்களையும், குழந்தைகளையும் அவரவா் வீடுகளிலேயே பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்வது அவசியமாகும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT