தமிழக முதல்வர் குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பாஜக பிரமுகர் கைது
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக எடப்பாடியை சேர்ந்த பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
எடப்பாடி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக எடப்பாடியை சேர்ந்த பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அரசு முறை பயணமாக துபாய் நகருக்குச் சென்று வந்தார். முதல்வரின் துபாய் பயணம் குறித்து எடப்பாடி அடுத்த நாச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் பிரசாத்(30) என்பவர் சமூக ஊடகங்களில் பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகக் கூறி இன்று காவல்துறையினர் கைது செய்தனர்.
பாஜக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளரான அருள் பிரசாத் அப்பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவர் சமூக ஊடகங்களில் தமிழக முதல்வர் துபாய் சென்றபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் சுமார் 17 லட்சம் மதிப்புடையது என்று அவதூறான கருத்துக்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று அருள் பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மேலும் அவர், தொடர் விசாரணைக்காக சங்ககிரியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பகுதியில் பாஜக நிர்வாகி திடீரென கைது செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.