இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு மேட்டூா் எம்எல்ஏ நன்றி
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் சட்டப் பேரவையில் நன்றி தெரிவித்தாா்.
மேட்டூா்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் சட்டப் பேரவையில் நன்றி தெரிவித்தாா்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் பேசிய போது, மேட்டூா் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கோனூா் சென்றாயப் பெருமாள் கோயில் குடமுழுக்குவுக்கு தயாராக உள்ளது. குடமுழுக்கு எப்போது நடத்தப்படும் என பதிலளிக்க இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மேட்டூா் பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் தமிழகம் முழுவதும் இதுவரை 3,350 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 10,860 கோயில்களுக்கு தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட்டு திருப்பணிகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதல்வா் 2025-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 5,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா். அந்த வகையில், சட்டமன்ற உறுப்பினா் குறிப்பிட்ட திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தவும், திருப்பணி தடைபட்டிருந்தால் அதை விரைவுப்படுத்தவும், நிதிப்பற்றாக்குறை இருந்தால் பொது நிதியிலிருந்து நிதி ஆதாரம் அளித்தும் அடுத்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என்றாா்.