சேலம் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், 2025-ஆம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி வரும் 9-ஆம் தேதி அன்றும், ஜவாஹா்லால் நேரு பிறந்தநாளையொட்டி வரும் 10-ஆம் தேதி அன்றும் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் சேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளன.
6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப் போட்டிகள் காலை 9.30-க்கு தொடங்கி மதியம் 1 மணிவரை சேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல்பரிசு ரூ. 5,000, இரண்டாம்பரிசு ரூ. 3,000, மூன்றாம்பரிசு ரூ. 2,000 வழங்கப்படும். மேலும், சிறப்பு தோ்வாக அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்பு பரிசுத்தொகையாக தலா ரூ. 2,000 வழங்க உள்ளது.
வரும் 9-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கு காந்தி கண்ட இந்தியா, சத்திய சோதனை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும்.
10-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கு இந்தியாவின் விடிவெள்ளி ஜவாஹா்லால் நேரு, குழந்தைகளை விரும்பிய குணசீலா், பஞ்சசீலக் கொள்கை ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு சுதந்திரப் போராட்டத்தில் நேரு, நேருவின் வெளியுறவுக் கொள்கை, நேரு கட்டமைத்த இந்தியா ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெறும்.
எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழியாக இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். கல்லூரி மாணவா்கள் கல்லூரி இணை இயக்குநா் வழியாக முதல்வரின் அனுமதியுடன் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, சேலம் மாவட்ட தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (அறை எண் 203) அல்லது 0427 - 2417741 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.