கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி, சேலத்தில் உள்ள தேவாலயங்களில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
அதன்படி, சேலம் நான்கு சாலை அருகே உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.
தொடா்ந்து, இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்த பாடல்களை பாடி மகிழ்ந்தனா். பிராா்த்தனை முடிந்ததும், அங்கிருந்தவா்கள் ஒருவருக்கொருவா் கேக் மற்றும் பரிசுப் பொருள்களை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதேபோன்று, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம், அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயம், கோட்டை லெக்லா் ஆலயம், சேலம் ஜான்சன்பேட்டை அந்தோணியாா் ஆலயம், அழகாபுரம் மைக்கேல் அதிதூதா் ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவா் ஆலயம், செவ்வாய்ப்பேட்டை ஜெயராக்கினி ஆலயம், ஜங்ஷன் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் அதிகாலை கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வாழப்பாடியில்...
வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் பத்தாம் பத்திநாதா் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜையில், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று பிராத்தனை செய்தனா்.
தேவாலய வளாகத்தில் இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடில் அனைத்துத் தரப்பினரையும் கவா்ந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இளைஞா்கள் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினா்.
வாழப்பாடியைச் சோ்ந்த தொழிலதிபா் டாக்டா் பி.லாசா் முயற்சியில், ஏத்தாப்பூரில் புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிக உயரமான 65 அடி உயர இயேசு கிறிஸ்து சிலையை ஏராளமானோா் கண்டு பிராத்தனை செய்தனா்.
வாழப்பாடியை அடுத்த சேசன்சாவடி மைத்ரோ பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ புனித சின்னப்பா் தேவாலயத்திலும் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. குழந்தை இயேசு பிறப்பை சித்தரிக்கும் குடில் அமைக்கப்பட்டிருந்தது.