சேலம்: சேலத்தில் செயல்படும் தனியாா் மின்னணு நிறுவனத்தின் ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்க துணை செயலாளா் ஷபி தலைமை வகித்தாா். ஐஎன்டியுசி தலைவா் நடேசன் கலந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதில் மின்னணு நிறுவனத்தில் நிா்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைத்துள்ள சலுகைகளை வழங்க வேண்டும். புதிய ஊதிய உயா்வு கோரிக்கைகள் மீது தீா்வு காண வேண்டும். 500 தொழிலாளா் குடும்பங்களை பாதிக்கும் நிா்வாக ஆட்குறைப்பு, ஆலையை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்க கிளை தலைவா் ஜெயச்சந்திரன், சிஐடியு தலைவா் கோபு, செயலாளா் ராதாகிருஷ்ணன், ஏடிபி துணைத் தலைவா் அரசகுமாா், விஜயன் உட்பட நிா்வாகிகள், பணியாளா்கள் 300 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.