மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பு விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி காலம் முடிந்ததால், கடந்த 28-ஆம் தேதிமுதல் காவிரி பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, குடிநீா் தேவைக்காக அணையில் இருந்து 800 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.
குடிநீா் தேவை அதிகரித்ததால் திங்கள்கிழமை மாலைமுதல் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 800 கனஅடியிலிருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 92.62 அடியிலிருந்து 92.55 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 50 கனஅடியிலிருந்து 39 கனஅடியாகவும் குறைந்துள்ளது. நீா் இருப்பு 55.61 டி.எம்.சியாக உள்ளது.