சிவகங்கை அரசு ஐ.டி.ஐ. மேம்படுத்தப்படுமா?
சிவகங்கை, செப்.1: சிவகங்கை மாவட்ட ஐ.டி.ஐ.யில் மாணவர்கள் சேராததால், ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன. சிவகங்கை மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனி கட்டடத்தில் இயங்குகிற
சிவகங்கை, செப்.1: சிவகங்கை மாவட்ட ஐ.டி.ஐ.யில் மாணவர்கள் சேராததால், ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன.
சிவகங்கை மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனி கட்டடத்தில் இயங்குகிறது. இங்கு பிட்டர், எலக்ட்ரீஷியன் ஆகிய 2 ஆண்டு படிப்புகளும், வெல்டர், துணி வெட்டுதல் மற்றும் தைத்தல் ஆகிய ஓராண்டு படிப்புகளும், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் என்ற ஓராண்டு படிப்பும், வாகனப் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு என்ற 6 மாதப் படிப்பும் உள்ளது.
கடந்த மே 27-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாயின. அதன் பின் ஜூன் மாத வாக்கில் சிவகங்கை ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.
ஒவ்வொரு தொழிற் பயிற்சிப் பிரிவிலும் 42 மாணவர்களுக்கான இடங்கள் உள்ளன (வெல்டர் மட்டும் 26 இடங்கள்). ஆனால், அவற்றில் போதுமான அளவில் மாணவர்கள் சேராததால், அவர்கள் சேருவதற்கான நாள் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
விருப்பமும் தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்ற தகவல் அனைத்து செய்தித்தாள்களிலும் வெளியாகியிருந்தது. அப்படியும் போதுமான அளவு மாணவர்கள் சேராததால், மீண்டும் ஆகஸ்ட் 31 வரை கெடு தேதி நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், மாணவர்கள் இப் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.
இந் நிலையில், பிட்டர் படிப்புக்கு 6 இடங்களும், வெல்டர் படிப்புக்கு ஓர் இடமும், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் படிப்புக்கு 37 இடங்களும், துணி வெட்டுதல் மற்றும் தைத்தல் படிப்புக்கு 38 இடங்களும், இரு சக்கர வாகனப் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு 29 இடங்களும் காலியாக உள்ளதாக மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தனியார் பாலிடெக்னிக்குகள், கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், இங்கு ஆண்டுக் கட்டணமாக ஈராண்டு படிப்புக்கு ரூ.195-ம், ஓராண்டுப் படிப்புகளுக்கு ரூ.185-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இலவச பஸ் பாஸ், தகுதியுள்ள பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் இனவாரியாக உதவித்தொகை, இலவச ஷூ, சாக்ஸ், இலவச சீருடை, பயிற்சி முடித்ததும் வேலை பழகுநர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இத்தனையையும் வழங்குகிறது அரசு. இவ்வளவு இருந்தும் மாணவர்கள் இதில் ஆர்வம் காட்டாததற்கான காரணம் குறித்து சிவகங்கை அரசு ஐ.டி.ஐ. முதல்வர் (பொறுப்பு) இளங்கோவனிடம் கேட்டபோது, இந்த தொழிற் பிரிவுகளுக்கு தேவையான எல்லா வசதிகளும் இருந்தும், ஏனோ தெரியவில்லை, இந்த படிப்புகளில் சேர இம் மாவட்டத்தில் பலர் ஆர்வம் காட்டவில்லை என்றார்.
ஆனால், சில மாணவர்கள் இங்கு போதுமான பயிற்றுநர்கள் இல்லை. முன்பு கிடங்காக இருந்த இடத்தை தொழிற்பயிற்சி கூடமாக மாற்றியுள்ளனர். எனவே, போதிய வசதிகள் இல்லை என்று தெரிவித்தனர்.
ஆகவே, மாணவர்கள் ஆர்வம் காட்டப்படாத தொழிற் பிரிவுகளுக்குப் பதிலாக லேத் ஆபரேட்டர், பிளம்பர், ஏர்-கண்டிஷனிங் அண்டு ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக், மெஷினிஸ்ட் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய வேண்டும். போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என கல்வியாளர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.
மானாமதுரை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா
மானாமதுரை, செப். 1: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மானாமதுரை நகரில் பேரூராட்சி அலுவலகப் பகுதி, ஆர்.சி. சர்ச் வளாகப் பகுதி, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் விற்பனை களை கட்டி இருந்தது.
மானாமதுரை நகரில் பழைய போஸ்டாபீஸ் தெரு, கன்னார் தெரு, சுந்தரபுரம் தெரு, உடைகுளம், புரட்சியார்பேட்டை, மறவர் தெரு, ரயில்வே காலனி உள்ளிட்ட பல இடங்களில் நண்பர்கள் மன்றங்கள், இளைஞர் அமைப்புகள், இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பந்தல் போடப்பட்டு, அதில் 5 அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தி சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
இதன்பின், இரவில் அந்தந்தப் பகுதி இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வேன், லாரிகளில் வைத்து மேள தாளத்துடன் ஊர்வலமாக நகரில் வீதி உலா வந்தனர். இதைத் தொடர்ந்து அப் பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும், மானாமதுரை நகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோயில்களிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
திருப்புவனம் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலும் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.