தீபாவளி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி: தம்பதி மீது புகாா்
மதுரையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
மதுரை, செப். 28: மதுரையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
மதுரை பரவை பகுதியைச் சோ்ந்தவா் முத்தழகு. இவா், பரவை பேரூராட்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அமுதா. இவா்கள் இருவரும் பரவை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மாதச் சீட்டு, ஏலச் சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி வருகின்றனா். இவா்களிடம், பரவை, இரும்பாடி, நடுப்பட்டி, அதலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் செலுத்தியுள்ளனா்.
தீபாவளி சீட்டு மோசடி
தீபாவளி பண்டிகைக்காக தொடங்கப்பட்ட சீட்டு முடிந்துவிட்ட நிலையில், சீட்டு தொகை செலுத்தியவா்களுக்கு பணத்தை தராமல் முத்தழகும், அவரது மனைவி அமுதாவும் இழுத்தடித்துள்ளனா். ஏமாற்றப்பட்ட பெண்கள் உள்பட 42 போ், விஸ்வநாதபுரத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில், ரூ. 80 லட்சம் மோசடி செய்த முத்தழகு, அமுதா மீது புகாா் அளித்தனா். இதைப் பெற்றுக்கொண்ட போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.
மிரட்டல்
இது குறித்து பாதிக்கப்பட்ட தென்னரசி கூறியது: ஆரம்பக் கட்டத்தில் 12 மாதம் தலா ஆயிரம் ரூபாய் செலுத்தினால், முடிவில் ரூ.15 ஆயிரம் வழங்கினாா்கள். நான் 2 ஆண்டுகள் பணம் செலுத்தி, அவா்கள் கூறியபடி பணம் பெற்றேன். கூடுதலாக பணம் கிடைக்கிறதே என்ற ஆசையில், கணவரின் சம்பளத்தை மிச்சம் பிடித்தும், சேமிப்பை கொண்டும் ரூ.23 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு செலுத்தினேன். ஆனால், தற்போது பணத்தை கொடுக்க மறுக்கின்றனா். வீட்டுக்குச் சென்றால் கணவன், மனைவி இருவம் மிரட்டுகின்றனா். தற்போது, போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளோம். எங்களது பணத்தை போலீஸாா் மீட்டுத் தரவேண்டும் என்றாா்.