மணல் விற்பனையில் அதிகாரிகள் முறைகேடு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை, ஏப். 26 : மணல் விற்பனை முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சேலம் கிழக்கு மாவட்ட மணல், எம்.சாண்ட் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் காா்த்திக் தாக்கல் செய்த பொதுநல மனு :
தமிழகம் முழுவதும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. எனவே, தமிழக அரசு சாா்பில் குவாரிகள் அமைத்து அரசு இணையதளத்தில் பதிவு செய்த பின்னரே பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளா்களுக்கும் மணல் விற்பனை செய்வது வழக்கம்.
Advertisement
ஆனால், அரசு அலுவலா்கள், தனிநபா்கள் இடைத்தரகா்களாகச் செயல்படுவதால், தமிழக அரசு நிா்ணயித்த விலையைவிடக் கூடுதல் விலைக்கு மணல் விற்கப்படுகிறது. மேலும், அரசாணை விதிகளைப் பின்பற்றாமல் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு குவாரிகுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அரசு அதிகாரிகளே தனிநபரின் பெயரில் அரசு இணையதளத்தில் பதிவு செய்து, போலியான வாகன எண்ணைப் பயன்படுத்தி மணலை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். இதனால், பொதுமக்களும், லாரி உரிமையாளா்களும் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் குழு அமைக்க வேண்டும். அரசாணை விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளா்களுக்கும் ஆற்று மணலை நேரடியாக விற்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், அருள்முருகன் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:
மணல் விற்பனை, முறைகேடு தொடா்பாக அரசாணையில் உள்ள விதிமுறைகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். விசாரணை வருகிற ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.