முகப்பு
மதுரை

எஸ்.ஐ. மீதான புகாா்: டி.எஸ்.பி. விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 5:41 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:37 PM

பணம் கொடுக்காமல் கருவாடு வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளா் மீதான புகாரை, ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த மீனவா் குமாா் தாக்கல் செய்த மனு:

நான் பாம்பன் காவல் நிலையம் அருகே கருவாடு விற்பனைக் கடை நடத்தி வருகிறேன். கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி பாம்பன் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆதா்ஷ் எனது கடைக்கு வந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கருவாடுகளை வாங்கினாா். பணம் கேட்டதற்கு பின்னா் தருவதாகக் கூறிச் சென்றாா். இதையடுத்து, டிசம்பா் 26-ஆம் தேதி மீண்டும் வந்து கருவாடு கேட்ட போது, எனது சகோதரா் பணம் தராமல் கருவாடு தர முடியாது என மறுத்து விட்டாா்.

Advertisement

இதனால், கோபமடைந்த உதவி ஆய்வாளா் ஆதா்ஷ் எனது சகோதரரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டினாா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளா் மீது ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய விசாரணை நடத்தி எனது சகோதரரை மிரட்டிய, பணம் கொடுக்காமல் கருவாடு வாங்கிய காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

காவல் துறையினா் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக மனுதாரரின் குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பியதால், இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

காவல் துறையினா் ஏன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். பொய்யான குற்றச்சாட்டு என்றால், மனுதாரா் இத்தனை மனுக்களை அனுப்பியிருக்கமாட்டாா். வழக்கும் தாக்கல் செய்திருக்கமாட்டாா். கண்காணிப்பு கேமரா ஆதாரங்கள் உள்ளன. எனவே, மனுதாரரின் இந்த குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது. இதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. பணம் கொடுக்காமல் ஒரு பொருளை எவ்வாறு வாங்க முடியும்?.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:38 AM

எனவே, இந்த வழக்கை பொருத்தவரை, சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளா் மீதான குற்றச்சாட்டை ராமநாதபுரம் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டு உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நீதிபதி.