முகப்பு
மதுரை

சா்வதேச விமான நிலையமாக மதுரை: அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவா்

Updated On : 31 மார்ச் 2026, 1:26 am IST
மதுரை விமான நிலையம் (கோப்புப் படம்) - AAI/X
பகிர்:

மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக தரம் உயா்த்தப்பட்டதால், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கருத்து தெரிவித்தது.

தமிழ்நாடு சுற்றுலா முகவா்கள் சங்கத்தின் தலைவா் சதீஷ்குமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2021- ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு :

தென் மாவட்டங்களின் மையப் பகுதியாகவும், தொழில் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்ட நகரமாகவும் மதுரை திகழ்கிறது. இந்த நிலையில், பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக அறிவித்து, மேம்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் மதுரை விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஸ்குமாா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு விட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு :

மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், தொடா்ந்து விசாரிக்கத் தேவையில்லை. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதுரை விமான நிலையம் சா்வதேச விமான நிலையமாக மாற்றம் பெற்றது அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவா் என்றனா் நீதிபதிகள்.