பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி லட்சார்ச்சனை வேள்வி மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடி லட்சார்ச்சனை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து லட்சார்ச்சனை வேள்வி நடைபெற்றது.
யாக குண்டத்தில் பட்டுச் சேலைகள், தங்கம், வெள்ளி மற்றும் மூலிகைப் பொருள்கள் இடப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.
அப்போது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் பெரியநாயகியம்மன் ஏற்றம் செய்யப்பட்டார். பின்னர் கோயில் யானை கஸ்தூரி முன்னே செல்ல, 50-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் தவில், நாதஸ்வரம் இசைக்க வெள்ளித்தேர் நான்கு ரதவீதிகளில் உலா வந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், டிஎஸ்பி.,வெங்கட்ராமன், காவல் ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.