முகப்பு
திண்டுக்கல்

பழனியில் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க நகராட்சி தீவிர நடவடிக்கை: ரூ.15 கோடியில் மதிப்பீடுகள் தயாரிப்பு

பழனி நகருக்கு கோடை காலத்தில் போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்ய வரதமாநதி  அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல நகராட்சி நி

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:54 AM
பகிர்:

பழனி நகருக்கு கோடை காலத்தில் போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்ய வரதமாநதி  அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் ரூ.15 கோடி மதிப்பில் கோடை கால நீர்த்தேக்கம், மேல்நிலைத் தொட்டிகள் கட்டவும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
 பழனி நகருக்கு கொடைக்கானலில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்க கோடை கால நீர்த்தேக்கமும், பற்றாக்குறையை சமாளிக்க பாலாறு அணையிலிருந்து தண்ணீரும் கொண்டு வரப்படுகிறது. தற்போது  கோடை காலம் துவங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் தேவையை சமாளிக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 
இதுகுறித்து நகராட்சி பொறியியல் துறை அதிகாரி கூறியதாவது: பழனி நகராட்சி கோடை கால நீர்த் தேக்கத்தில் கூடுதல் தண்ணீர் சேமிக்கவும், கூடுதல் தொட்டிகள் அமைக்கவும் 
சுமார் ரூ.7 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 
தவிர பழனி நகருக்கு குடிநீர் குழாய்கள் கொண்டு செல்லவும், ராஜாநகரில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டவும் ரூ.8 கோடிக்கு மதிப்பீடுகள் அனுப்பப்பட்டுள்ளன. இவை அனுமதிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும்.  மேலும்,  பழனி நகருக்கு முன்பு வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்பட்டது.
பாலாறு அணை திட்டம் நடைமுறைக்கு வந்த பின் அது பயனின்றி இருந்தது.  
ஆனாலும், தற்போது அந்த குழாய் இணைப்புகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. வரதமாநதி அணையில் விவசாய பயன்பாடு, ஆயக்குடி குடிநீர் விநியோகம் போக மீதம் தண்ணீர் இருந்தால் பழனிக்கு அவசர காலத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.