தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சூப்பர் முதல்வராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே டாஸ்மாக் மதுபானம் ஏற்றி வந்த லாரியை தீ வைத்து எரித்த வழக்கில் கைதான வேல்முருகன்
உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் திணடுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
காவிரி பிரச்னைக்காக போராடி புழல் சிறையில் இருந்தபோது, திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்தை சேதப்படுத்தி கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக என் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீண்ட நாள்கள் என்னை சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு எத்தனை வழக்குகள் தொடுத்தாலும், சட்ட ரீதியான அவற்றை எதிர்கொள்வேன். மக்கள் விரோத திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். தமிழகத்தில் காவல் துறை மூலம் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு தேர்தல் மூலம் மக்கள் பதில் அளிப்பார்கள்.
தமிழகத்தில் ஆளுநர் தான் சூப்பர் முதல்வராக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அடுத்த தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியால் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பெற முடியாது என்றார்.