திண்டுக்கல் அடுத்துள்ள கசவனம்பட்டி மௌன குருசுவாமிகளின் 36ஆவது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த 3ஆம் தேதி இக்கோயில் திருவிழா தொடங்கியதை அடுத்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மாலை அணிந்தும், காப்புக் கட்டியும் விரதம் தொடங்கினர்.
இந்நிலையில், ஐப்பசி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை குருபூஜை விழா நடைபெற்றது.
இதனையொட்டி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சோமலிங்கபுரம், காசி, ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் பால் கலசங்கள் மூலம் மூலவருக்கு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
உற்சவருக்கு தங்க கிரீட அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட சாதுக்களுக்கு சொர்ண தானம் மற்றும் வஸ்திர தானம் வழங்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், முன்னாள் அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவுக்கான ஏற்பாடுகளை மௌனகுரு சுவாமிகள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.