1,128 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உபகரணங்கள் வழங்கல்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,128 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.87.17 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நவீன
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,128 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.87.17 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நவீன உபகரணங்களை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் சனிக்கிழமை வழங்கினார்.
ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் மற்றும் இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் ஆகியவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளர் சரஸ்வதி சந்திரசேகர், அலிம்கோ நிறுவனத்தின் மைய தலைவர் அனுபம் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த நிறுவனம், தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கி பயன்பெறச் செய்துள்ளது. அதேபோல் நிகழாண்டிற்கு 5ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளனர் என்றார். அதனைத் தொடர்ந்து, மோட்டார் பொருத்திய 3 சக்கர சைக்கிள்கள் மற்றும் சக்கர நாற்காலிகள், 3 சக்கர சைக்கிள்கள், ஊன்றுகோல்கள், நடைபயிலும் வண்டி, காதொலி கருவிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் கல்வி பயிலும் சாதனம் உள்பட ரூ.87.17 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நவீன உபகரணங்களை, பயனாளிகளுக்கு அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, நலப்பணிகள் இணை இயக்குநர் ஜெ.மாலதி பிரகாஷ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.