நத்தத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் வீட்டில் ரூ.1.50 லட்சம் மற்றும் 17.5 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் வேலவன்(45). அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக, நத்தம் அடுத்துள்ள உலுப்பக்குடியிலுள்ள பூர்வீக வீட்டிற்கு குடும்பத்தினருடன் வேலவன் சென்றுவிட்டாராம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், செவ்வாய்க்கிழமை இரவு வேலவன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17.5 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவரது வீட்டிலும் திருட முயற்சி நடந்துள்ளது. அந்த வீட்டில் பணம், நகை உள்ளிட்டப் பொருள்கள் சிக்காததால், வீட்டிலிருந்து பொருள்களை சிதறிவிட்டு வெளியேறியுள்ளனர்.
இதனிடையே வேலவன், புதன்கிழமை திரும்பி வந்து பார்த்தபோது, பணம் மட்டும் நகை திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்தில் வேலவன் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.