தமிழக அரசு மத்திய அரசின் பினாமி அரசு போல செயல்படுவதால் கடந்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் தோல்வியடைந்தது; அதுபோல நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும் அதிமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் வாக்களித்து தோல்வியடைய செய்வார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அமைப்பு நிலை பயிலரங்குக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வரின் கட்டுப்பாட்டிலுள்ள காவல் துறையில் ரூ. 350 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக காவல் துறையின் தலைவரே தெரிவித்தும் அந்த துறை அமைச்சரும், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபோன்ற ஊழலை அதிகாரிகளால் மட்டுமே செய்ய இயலாது. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் உடனிருந்தால் மட்டும் தான் செய்ய முடியும்.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டித்து வரும் அக்.16 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். பாஜக அரசின் பினாமி அரசாக செயல்பட்டு வரும் தமிழக அரசு கடந்த மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தது.
அதேபோல வரவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு எதிராக பொதுமக்கள் வாக்களித்து திமுக கூட்டணியை வெற்றி பெற செய்வார்கள் என்றார்.