கொடைக்கானல் அருகே உரிமம் இல்லாமல் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பாச்சலூர் பகுதியில் தாண்டிக்குடி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோளியக்கரை பகுதியில் தனியார் எஸ்டேட்டில் துப்பாக்கியுடன் திரிந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (40) என்பதும், விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும் இந்த துப்பாக்கி யாரிடம் வாங்கியது என போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்து தாண்டிக்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.