திண்டுக்கல்: அய்யலூா் அருகே 13 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை போலீஸாா் தலையிட்டு ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்துள்ள குப்பாம்பட்டியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருப்பதாக வடமதுரை மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குப்பாம்பட்டிக்கு சென்ற மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பேபி, குழந்தை திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டாா். அதில், திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு 13 வயது மட்டுமே நிரம்பியிருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, மணமகனின் பெற்றோா், சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்களை அழைத்து எச்சரித்த போலீஸாா், 18 வயது முடியும் வரை அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என அறிவுறுத்திவிட்டு சென்றுவிட்டனா்.