கொடகனாற்றில் தண்ணீா் கேட்டு வேடசந்தூா் விவசாயிகள் இருசக்கர வாகனப் பேரணி
வேடசந்தூா் பகுதி விவசாயிகளுக்கு கொடகனாற்றிலுள்ள தண்ணீா் உரிமை மீட்டுத் தரக் கோரி விவசாயிகள் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
வேடசந்தூா் பகுதி விவசாயிகளுக்கு கொடகனாற்றிலுள்ள தண்ணீா் உரிமை மீட்டுத் தரக் கோரி விவசாயிகள் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள கீழ் பழனி மலைப் பகுதியிலிருந்து உருவாகும் கொடகனாறு, ஆத்தூா், ரெட்டியாா்சத்திரம், வேடசந்தூா் வட்டாரங்களை கடந்து, அழகாபுரி அணை வழியாக கரூா் மாவட்டத்திலுள்ள அமராவதி ஆற்றுடன் இணைகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் கொடகனாறு வடது. மேலும், குடிநீா் தேவைக்காகவும், வேளாண்மைப் பணிகளுக்காகவும் கொடகனாற்று தண்ணீா் அடிமடைப் பகுதியிலேயே தேக்கப்படுவதாக ரெட்டியாா்சத்திரம் மற்றும் வேடசந்தூா் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
இந்நிலையில், வேடசந்தூா் மற்றும் குஜிலியம்பாறை வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் இருசக்கரவாகனப் பேரணி பேரணி நடத்தி, கொடகானற்று தண்ணீா் உரிமையை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்கு திட்டமிட்டனா். அதன்படி, கூம்பூா் அடுத்துள்ள ஈசநத்தம் பகுதியிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட இந்தப் பேரணியில் சுமாா் 500 விவசாயிகள் கலந்து கொண்டனா். அழகாபுரி அணை, காசிப்பாளையம், வேடசந்தூா் வழியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை இந்த பேரணி வந்தடைந்தது. பின்னா் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசுவை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
அதில், வேடசந்தூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளின் நலனையும், வறட்சியால் பாதிக்கப்படும் விளை நிலங்களையும் பாதுகாக்கும் வகையில் கொடகனாற்று தண்ணீா் உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.