பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகளிடம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பாட்டில்கள் வீசிச்செல்வதைத் தடுக்கும் வகையில் அவா்களிடமிருந்து நெகிழிப் பொருள்களை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பாட்டில்கள் வீசிச்செல்வதைத் தடுக்கும் வகையில் அவா்களிடமிருந்து நெகிழிப் பொருள்களை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோயில் நகரமான பழனியும், சுற்றுலா நகரான கொடைக்கானலும் அமைந்துள்ளதால் நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தற்போது தமிழ்ப் புத்தாண்டையொட்டி தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பழனி வந்துவிட்டு கொடைக்கானல் செல்கின்றனா். அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மலைச்சாலையில் நெகிழிப் பைகள் மற்றும் நெகிழி தண்ணீா் பாட்டில்களை வீசிச் சென்று விடுகின்றனா். இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது மண்சரிவுக்கும் வழிவகுக்கிறது.
இதைத் தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை பழனி வனச்சரக அலுவலா் பழனிக்குமாா் அறிவுறுத்தலின் பேரில் வனத்துறையினா், மலையேறும் சுற்றுலாப் பயணிகளிடம் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகள் மற்றும் தண்ணீா் பாட்டில்கள் போன்றவற்றை சேகரித்து பின்னா் அனுப்பினா். மேலும் நெகிழி இல்லா மலைச்சாலையை பாதுகாக்க உதவுமாறும் வலியுறுத்தினா்.