முகப்பு
திண்டுக்கல்

அடுக்கம்- பெரியகுளம் மலைச்சாலையை சீரமைக்கும் பணி தீவிரம்

கொடைக்கானல் அடுக்கம்- பெரியகுளம் மலைச்சாலையில் ஏற்பட்ட மண் சரிவை மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

கொடைக்கானல் அடுக்கம்- பெரியகுளம் மலைச்சாலையில் ஏற்பட்ட மண் சரிவை மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது.

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பெய்த தொடா் மழையின் காரணமாக அடுக்கம்-பெரியகுளம் மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் குருவிக்காடு பகுதியில் சாலை அதிக சேதமடைந்தது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் அடுக்கம், சாமக்காட்டு பள்ளம், தாமரைக்குளம், பாலமலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கிராமமக்கள் இருசக்கர வாகனங்களில் அன்றாடப் பணிகளுக்காக கொடைக்கானல்- வடகவுஞ்சி, பெருமாள்மலை உள்ளிட்ட இடங்களுக்கு ஆபத்தான முறையில் சென்று வந்தனா். இதையடுத்து, சேதமடைந்த இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. இதுவரை சுமாா் 8 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. 70--க்கும் மேற்பட்ட பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் தற்போது கொடைக்கானல் பகுதிகளில் மழை பெய்து வருவதால் இப்பணிகளில் தொய்வு ஏற்படும் என்றும், பலத்த மழை பெய்தால் கூடுதலாக சேதம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

எனவே இப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.