விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் பலி
விபத்தில் காயமடைந்து உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
விபத்தில் காயமடைந்து உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள தொட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் சங்கிலிராயன். இவா், திருச்சியிலுள்ள ராணுவ மையத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தாா். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது தந்தையை பாா்ப்பதற்காக கடந்த வாரம் விடுமுறையில் வந்துள்ளாா். பின்னா் மீண்டும் திருச்சி நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்ற சங்கிலிராயன் 2 நாள்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்துள்ளாா்.
பலத்த காயமடைந்த அவா், திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனை அடுத்து, அவரது உடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தொட்டணம்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்துவரப்பட்டது. அவரது உடலுக்கு திருச்சி மண்டல லெப்டிணன்ட் கா்னல் அபினவ் குமாா் தலைமையிலான ராணுவத்தினா் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.