துரந்தர் 2! குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சூழலை உருவாக்க முயற்சி: காங்கிரஸ்
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சூழ்நிலையை உருவாக்கவே துரந்தர் 2 படம் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ முடியாது என துரந்தர் படத்தின் மூலம் பாஜக கூற முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. தாரிக் அன்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் செய்தியாளருடன் காங்கிரஸ் எம்.பி. தாரிக் அன்வர் பேசுகையில், "துரந்தர் 2 படத்தைத் தயாரித்தவர்கள் கண்டிப்பாக வெறுப்பைப் பரப்புபவர்கள்தான் என்பது தெளிவாகிறது. அவர்கள் நாடு முழுவதும் வெறுப்பைப் பரப்புவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
படத்தில் காட்டப்பட்டுள்ள வன்முறையின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை ஊக்குவிக்கவே துரந்தர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் பாஜகவின் செயல்திட்டமும்கூட.
இதனைச் செய்தவர்கள் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தான். ஆனால், வருங்காலங்களில் இது இந்தியாவுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறும் என்பதை அவர்கள் அறியவில்லை.
அவர்களின் செயல்பாட்டால், பாகிஸ்தானுக்குத்தான் மிகவும் பயனளிக்கப் போகிறது. பாகிஸ்தான் சிற்பியான முகமது அலி ஜின்னா செய்ய முடியாததை, பாஜகவும் ஆர்எஸ்எஸும் இங்கு செய்து கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்களும் இந்துக்களும் இணைந்து வாழ முடியாது என்று ஜின்னா கூறுவார். பிரிவினையின்போது, பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அங்கு சென்றனர்; இந்தியாவின் நலனை விரும்பியவர்கள் இங்கேயே தங்கினர்.
ஆனால், இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ முடியாது என்று கூறும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் பாகிஸ்தானின் கூற்றை உண்மையாக்க விரும்புகின்றனர்" என்று தெரிவித்தார்.