முகப்பு
கிரிக்கெட்

வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக எதிரணிகளிடம் திட்டங்கள் இருக்கும்: இர்பான் பதான்

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டினைக் கைப்பற்ற எதிரணிகளிடம் திட்டங்கள் இருக்குமென இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Updated On : 20 மார்ச், 2026 at 2:32 PM
வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்) - படம் | AP
பகிர்:

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டினைக் கைப்பற்ற எதிரணிகளிடம் திட்டங்கள் இருக்குமென இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கடந்த ஓராண்டாக மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடர், கடந்த ஐபிஎல் சீசன் என இரண்டிலும் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடினார். ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

14 வயதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடவுள்ளார். அதிரடியாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி இந்த ஐபிஎல் சீசனில் எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டினைக் கைப்பற்ற எதிரணிகளிடம் திட்டங்கள் இருக்குமென இர்பான் பதான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் அதிகப்படியான அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை அவர்கள் திறம்பட கையாள வேண்டும். இளம் வீரர்கள் முதல் நாளில் ஹீரோவாகவும், அடுத்த நாளில் ஜீரோவாகவும் மாறலாம். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நன்றாக விளையாடி வருகிறார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷியைக் கட்டுப்படுத்த எதிரணிகள் பல்வேறு திட்டங்களுடன் வர அதிக வாய்ப்பிருக்கிறது.

தொடர்ச்சியாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசி சூர்யவன்ஷிக்கு எதிரணிகள் நெருக்கடியை ஏற்படுத்தலாம். எதிரணியின் இந்த சவாலை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்க வேண்டும். ஆஃப் ஸடம்புக்கு வெளியே வீசப்படும் பந்தில் ஆட்டமிழக்க நேர்ந்தாலும், அதனையும் அவர் திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டியிருக்கும். அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா சந்தித்த அதே மாதிரியான சவால்களை சூர்யவன்ஷியும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Irfan Pathan has said that the opposition will have plans to take the wicket of young player Vaibhav Suryavanshi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.