மண் சரிவால் போக்குவரத்து நிறுத்தம்: கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் வருகை பாதிப்பு
மண் சரிவு ஏற்பட்டுள்ள பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
மண் சரிவு ஏற்பட்டுள்ள பழனி-கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த 31-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் நள்ளிரவில் கொடைக்கானல்-பழனி சாலையில் சவரிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பெருமளவில் சேதமடைந்தது. இதனால் இந்த சாலையில முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களாக கேரளா, ஊட்டி போன்ற பகுதிகளிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மேலும் வரும் 8-ஆம் தேதி முதல் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவு வருவது வழக்கம். ஆனால் தற்போது பழனி மலைச்சாலை சேதமடைந்து சீரமைக்கப்பட்டு வருவதால் வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு சேதமடைந்த சாலைகளை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந் நிலையில் கொடைக்கானலில் சற்று மழை குறைந்துள்ளது. இதனால் வார விடுமுறையை முன்னிட்டு வழக்கமான சுற்றுலாப் பயணிகள் வருகை காணப்பட்டது. ஆனால் கேரளப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் வியாபாரிகள் சற்று பாதிப்படைந்துள்ளனா்.