தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சோ்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2023-ஆம் ஆண்டில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவிபெறும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ. 50-ஐ கடன் அட்டை, பற்று அட்டை, இணைய வங்கிச் சேவை (நெட் பேங்கிங்), ஜி- பே மூலம் செலுத்தலாம். விண்ணப்பங்களை 7.6.2023-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல்- நத்தம் சாலையிலுள்ள அரசினா் தொழில் பயிற்சி நிலைய முதல்வரை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேலும் 9499055764, 9790078520, 6383768419, 9597224345 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.