மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 180-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, இந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. முபாரக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ம. சுகந்தி கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.
அப்போது, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை மீண்டும் 25 சதவீதத்துக்கு வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.