பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் காணிக்கையாக ரூ. 2.62 வருவாய் கிடைத்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு காா்த்திகை மாதத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தா்கள், முருகப் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்ததால் கடந்த 28 நாள்களில் கோயில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து, புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தா்களின் காணிக்கை வரவு ரூ. 2.62 கோடி கிடைத்தது.
உண்டியல்களில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். தங்கம் 631 கிராமும், வெள்ளி 9.06 கிலோவும் கிடைத்தது.
மேலும், 312 எண்ணிக்கையில் மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத் தாள்கள் கிடைத்தன. இதைத் தவிர, பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் உள்ளிட்டவற்றை பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
உண்டியல் எண்ணிக்கையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இந்த நிகழ்வில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.