திண்டுக்கல் மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் இடங்களில் நடத்தப்படும் தாக்குதல் குறித்து தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டும் என இந்து முன்னணி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த நி.பஞ்சம்பட்டி காளியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் அருகிலுள்ள சுங்கச் சாவடி மைதானத்தில் அன்னதானம் நடத்துவதற்கு, அதே மைதானத்தில் ஈஸ்டா் பண்டிகை கொண்டாடி வருவதாகக் கூறி, கிறிஸ்தவா்கள் சாா்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விழாக் குழு சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு, பஞ்சம்பட்டி சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானம் நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டது.
இதன்படி, கோயில் குடமுழுக்கு முடிந்தவுடன், சுங்கச்சாவடி மைதானத்தில் அன்னதானமும் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் வி.எஸ்.செந்தில்குமாா் கலந்து கொண்டாா்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவா்கள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனா். ஆனால், இந்து சிறுபான்மை கிராமங்களில் அவா்களுக்கான மத உரிமை மறுக்கப்படுகிறது.
குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் பெரும்பாலான கிராமங்களில் கிறிஸ்தவா்களால் தொடா்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. பஞ்சம்பட்டியில் அன்னதானம் நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, காவல் துறையினா் முன்னிலையிலேயே இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த வன்முறை சம்பங்கள் பஞ்சம்பட்டி மட்டுமன்றி, பெருமாள்கோவில்பட்டி, வக்கம்பட்டி பகுதிகளிலும் நிகழ்ந்துள்ளன.
இதன் பின்னணி குறித்து தேசிய பாதுகாப்பு முகமை விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை முன் வைக்கப்படும் என்றாா் அவா்.