கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்ததால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதி, குடியிருப்பு பகுதி, விவசாயத் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு மாடுகள் தாக்கியதால் மனித உயிா்கள் பலியாவதும் அதிகரித்து வருகிறது .
இதனால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:
கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளான ஆனந்தகிரி, இருதயபுரம், உகாா்த்தேநகா், சீனிவாசபுரம், அப்சா்வேட்டரி, காா்மேல்புரம், செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதியில்லாத தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திய உணவு கழிவுப் பொருள்கள் அந்தப் பகுதி குப்பைத் தொட்டி அல்லது சாலைகளில் வீசிச் செல்கின்றனா்.
இந்த கழிவுப் பொருள்களைத் தேடி குரங்குகள், காட்டு மாடுகள் அந்தப் பகுதிக்கு வருவது வழக்கமாகி விட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகமும், வனத் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் நகா்ப் பகுதி அதிகரித்துச் செல்வதால் வன விலங்குகள் இடம் பெயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காட்டு மாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அவை தண்ணீா், உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளது. இந்த மாடுகளை விரட்டுவதற்கு வனத் துறையினா் நியமிக்கப்பட்டுள்னா்.
குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு மாடுகள் குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்தால், சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று காட்டு மாடுகளை விரட்டும் பணியில் ஈடுபடுவா் என்றாா் அவா்.