மதுரை மாவட்ட மைய நூலகத்தில் இணையதளப் பிரிவு செயல்படுவது எப்போது?
மதுரை, ஜூன் 21 : மதுரை மாவட்ட மைய நூலகத்தில் இணையதள வசதியுடன் கூடிய பிரிவு எப்போது செயல்படத் தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் வாசகர்கள் உள்ளனர். மதுரை மாவட்ட மைய நூலகம் சிம்மக்கல் பகுதியில் கடந்த 50
மதுரை, ஜூன் 21 : மதுரை மாவட்ட மைய நூலகத்தில் இணையதள வசதியுடன் கூடிய பிரிவு எப்போது செயல்படத் தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் வாசகர்கள் உள்ளனர்.
மதுரை மாவட்ட மைய நூலகம் சிம்மக்கல் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.
1965-ல் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அடிக்கல் நாட்டி, 1970-ம் ஆண்டில் அமைச்சராக இருந்த நெடுஞ்செழியனால் திறந்துவைக்கப்பட்டது.
தென் மாவட்டத்தில் உள்ள அரசு நூலகங்களில் பெரிய நூலகமாக விளங்கும் இந்த நூலக வளாகத்தில் மாவட்ட நூலக ஆணைக் குழுவும் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பொது நூலகத்தில் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், வரலாறு, கதைகள், புதினங்கள், கட்டுரைகள், போட்டித் தேர்வு நூல்கள் என 13 லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
தினமும் மதுரை நகர் மட்டுமன்றி புறநகர் பகுதி மக்களும் இங்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
இந்த நூலகத்தில் தரைத் தளத்தில் பொது வாசகர்களும், இரண்டாவது தளத்தில் போட்டித் தேர்வுக்குத் தயாராவோரும் வாசிப்பதற்கான பிரிவு செயல்படுகிறது. சிறுவர், மகளிர்க்கான தனிப் பிரிவு செயல்படுகிறது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ந்து நூலகம் இயங்கி வருகிறது.
நூலகத்தின் முதல் தளத்தில் உள்ள சிறு குறிப்பெடுக்கும் பகுதியில் (தங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங் நங்ஸ்ரீற்ண்ர்ய்) போதிய வெளிச்சம் இல்லாத நிலை உள்ளது. மேலும், புத்தகங்களில் தூசியும் படிந்து காணப்படுகிறது.
நாள்தோறும் 600 பேர் வரை வந்து செல்லும் இந்த நூலகத்தில், இப் பிரிவுக்கு மட்டும் படித்த பட்டதாரி இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் சுமார் 100 பேர் வந்து செல்கின்றனர்.
செயல்படாத சிவில் சர்வீஸ் தேர்வு படிப்புப் பிரிவு: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிக்காக தேர்வு எழுதுவோருக்கு பயன்படும் வகையில் பிரத்யேகமாக நூலகத்தின் 3-வது தளத்தில் தனியாக ஒரு பிரிவு கடந்த 10 ஆண்டுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது.
பட்டம் பெற்ற இளைஞர்களை சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக ஊக்குவிக்கும் வகையில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவு தற்போது செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
புத்தகங்களும், போதிய குளிரூட்டப்பட்ட அறை வசதியும் கொண்டதாக இருந்தும் கடந்த 5 ஆண்டுகளாக பயனின்றி உள்ளது.
பணியாளர் பற்றாக்குறை: நூலகத்தில் உதவியாளர், முதல்நிலை எழுத்தர், கண்காணிப்பாளர், நூல் சரிபார்ப்பு அலுவலர் உள்பட பல்வேறு பணியிடங்களும் காலியாக உள்ளதாக நூலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காட்சிக் கூடமாகும் நூலக இணையதளப் பிரிவு: நூலகத்தின் முன்புற உள்பகுதியில் இரு ஆண்டுக்கு முன் உள்கட்டமைப்பு பணிக்காக ரூ.4 லட்சத்தில் இணையதள வசதியுடன் கூடிய கணினி நூலகப் பிரிவு பணி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்காக தனி கணினிக் கருவிகளும், ஏ.சி. மெஷின்களும் தருவிக்கப்பட்டு கண்ணாடி தடுப்புடன் கூடிய அறையும் கட்டப்பட்டது.
ஆனால், கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாகியும் திறப்பு விழா காணாமல் ஏனோ மூடியே கிடக்கிறது.
ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?: உதயசந்திரன் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் கணினி நூலகப் பிரிவுக்கு முயற்சி எடுக்கப்பட்டது.
பின்னர் எஸ்.எஸ்.ஜவஹர் மாவட்டஆட்சியராக இருந்தபோது பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை.
தற்போதைய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் ந.மதிவாணன், மாவட்ட வளர்ச்சிப் பணிகள், திட்டப் பணிகளில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார்.
அவர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பது வாசகர்களின் கருத்தாகும்.