திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியில் நடைபெற்ற வாக்களர்கள் சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்கள் 986 பேர் மனு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உள்பட்ட 123 வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் திருத்தம் உள்ளிட்டவைகள் செய்ய சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சரவணபெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் முருகசெல்வி மேற்பார்வையிட்டார்.
முகாமில் புதிய வாக்காளர்களாக சேர்க்க 986 பேர் மனு செய்துள்ளனர். 48 பேர் பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் செய்ய 111 பேர், முகவரி மாற்றம் செய்ய 63 பேர் மனு செய்துள்ளனர். இந்த முகாம் வருகின்ற 31 ஆம் தேதி வரை தாலுகா அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெறும். இதனை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வட்டாட்சியர் சரவணபெருமாள் தெரிவித்தார்.