சிற்றுந்து ஓட்டுநருக்கு கத்திக் குத்து: தந்தை, மகன் மீது வழக்கு
மதுரையில் முன்விரோத தகராறில் சிற்றுந்து ஓட்டுநரை கத்தியால் குத்திய தந்தை, மகன் மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மதுரையில் முன்விரோத தகராறில் சிற்றுந்து ஓட்டுநரை கத்தியால் குத்திய தந்தை, மகன் மீது, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி ( 26). மதுரையில் தனியார் சிற்றுந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடன், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் நடத்துனராகப் பணிபுரிந்து வருகிறார். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளைச்சாமி சனிக்கிழமை இரவு அண்ணா பேருந்து நிலையம் அருகே சிற்றுந்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த விஜயகுமார், அவரது மகன் அஜீத்குமார் ஆகியோர் பேருந்தை வழிமறித்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், இருவரும் சேர்ந்து வெள்ளைச்சாமியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜயகுமார், அஜீத்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.