மதுரை மாவட்டம், சோழவந்தானில் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிய ரௌடியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சோழவந்தான் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் சதீஷ்குமார், தலைமைக் காவலர் ராஜேந்திரன் ஆகியோர், சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சோழவந்தான் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து சோதனையிட்டனர். அதில், அந்த நபர் ஆயுதம் வைத்திருப்பது தெரியவந்தது. உடனே, அவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் அரிவாளால் வெட்டியதில் தலைமைக் காவலர் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். ஆனால், சார்பு-ஆய்வாளர் சதீஷ்குமார், அந்த நபரை மடக்கிப் பிடித்தார்.
பின்னர், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில், தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டியவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி பாண்டி (25) என்பது தெரியவந்தது. அதன்பின்னர், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.