உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த திட்டம்: வேளாண் விற்பனை வணிகத்துறை ஆணையர் தகவல்
உணவுப்பதப்படுத்துதல் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருவதாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் சஞ்சோங்கம் ஜதக் ஷிரு கூறினார்.
உணவுப்பதப்படுத்துதல் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருவதாக வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் சஞ்சோங்கம் ஜதக் ஷிரு கூறினார்.
உணவுப்பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டு விற்பனை முறை குறித்து இந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
சிஐஐ மதுரை மண்டல தலைவர் எஸ்.ராஜமோகன் தலைமை வகித்தார். இதில், சஞ்சோங்கம் ஜதக் ஷிரு பேசியதாவது:
உணவுப்பதப்படுத்தும் முறை குறித்து தமிழகத்தில் உள்ள உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் பலருக்கு தெரியாத நிலை உள்ளது. இக்குறையை களையும் வகையில் உணவுப்பதப்படுத்துதல் துறையில் முன்னணியில் உள்ள ஆந்திரம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆலோசனைபெற்று, தமிழகத்தில் அந்த துறையை மேம்படுத்தும் பணியில் அரசு ஈடுபட உள்ளது.
உணவுப்பதப்படுத்துதல், திட்டமிடல், விற்பனை உள்ளிட்ட 8 முக்கியப் புள்ளிகள் குறித்து நிபுணர்களுடன் அரசு ஆலோசித்து வருகிறது. மேலும் உணவுப்பதப்படுத்துதல் பிரிவின் செயல்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை கவரும் வகையில் அரசு திட்டங்களை வகுத்து வருகிறது என்றார்.இக்கருத்தரங்கில், சிஐஐ மதுரை மண்டல துணைத் தலைவர் கே.நாகராஜ், மதுரை வேளாண் கல்லூரி டீன் எஸ்.சுரேஷ் மற்றும் 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.