தேசிய விளையாட்டு போட்டி: மார்ச் 30-இல் வீராங்கனைகள் தேர்வு
மதுரையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு, வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான வீராங்கனைகள் தேர்வு, வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் கி.த.ராஜகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை பிரிவு சார்பில் கேலோ இந்தியா என்ற தலைப்பில் தேசிய அளவிலான பெண்கள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
வரும் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதுரை டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டுத் திடலில் (ரேஸ்கோர்ஸ்) காலை 8 மணிக்கு போட்டிகள் தொடங்குகின்றன.
தடகளம், ஹாக்கி, கபடி, நீச்சல், கோ-கோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், இறகுப்பந்து, மல்யுத்தம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மாவட்ட அளவிலான தேர்வில் தடகளத்தில் 4 பேர், கபடி மற்றும் ஹாக்கியில் 3 பேர், இதர விளையாட்டுகளில் 2 பேர் தேர்வு செய்யப்படுவர். மாவட்ட அளவில் சிறந்த வீரர், வீராங்கனைகளாகத் தேர்வு செய்யப்படுவோர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளவும், பின்பு மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுவோர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும் அரசு செலவில் அழைத்துச்செல்லப்படுவர். 31.12.2017 அன்று 25 வயதுக்கு உள்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். அதாவது 1.1.1993 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் வீராங்கனைகள் வரும் 30-ஆம் தேதி காலை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பெயர்களை பதிவு செய்ய
வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.