திருமங்கலத்தில் 65 ஏக்கரில் பஸ் போர்ட்' திட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
திருமங்கலத்தில் 65 ஏக்கரில் மத்திய அரசின் பஸ்போர்ட்' (அதிநவீன பேருந்து நிலையம்) திட்டம் கொண்டுவரப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
திருமங்கலத்தில் 65 ஏக்கரில் மத்திய அரசின் பஸ்போர்ட்' (அதிநவீன பேருந்து நிலையம்) திட்டம் கொண்டுவரப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
திருமங்கலம், கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
தென்பகுதியில் 12 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை மாவட்டத்தில் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உறுதியாக அமைக்கப்படும்.
அதேபோல் திருமங்கலம் பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூ.22 கோடியில் அமைக்கும் பணி, விரைவில் தொடங்க உள்ளது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசின் பஸ்போர்ட்' திட்டம் தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளில் அமைய உள்ளது. அதில், மதுரையில் இத்திட்டத்தை திருமங்கலம் தொகுதியில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக 65 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.3 கோடி வழங்கப்பட உள்ளது.
திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பு நிதியாக ரூ. 4 கோடி வழங்கி உள்ளனர்.
மேலும், திருமங்கலம் நகரில் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு (60 ஆயிரம்) ஏற்ப குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதுபோன்ற திட்டங்களால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதி தன்னிறைவுபெற்ற தொகுதியாக உருவாக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் அய்யப்பன், நகர செயலர் விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.